Wednesday, June 4, 2008

சமுதாய ஜமாத்தின் சிந்தனைக்கு ஒரு திறந்த மடல்!!

சமுதாய ஜமாத்தின் சிந்தனைக்கு
ஒரு திறந்த மடல்!!
அஸ்ஸலாமு அலைக்கும்!!


அன்பிற்கினிய இஸ்லாமிய ஜமாத்தின் பொறுப்பாளர்களுக்கு, நம் சமுதாய நிலைகளை திரும்பிப் பார்த்து தீர்க்கமான முடிவு எடுக்க ஒரு அழைப்பு.
சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகம் மிக மிக நெருக்கடியான சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வெடிக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமைகள் இருக்கின்றன. பல்வேறு அமைப்புகள் மக்கள் நல மார்க்க பணிகளில் சாதனைகள் ஆற்றி இருந்தாலும், வேதனையே சமுதாயத்தின் விழிகளில் வெள்ளமாய் நிற்கிறது. நம் அடிப்படை மார்க்க கடமைகளை செய்வது கூட தேச துரோகம் போன்ற மாயை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. சமூக நல்லிணக்கம், ஒருமைப்பாடு, மனிதநேயம் இவற்றிற்கு முஸ்லிம்கள் எதிரானவர்கள் என்ற நிலை மக்கள் மனங்களில் வேகமாக விதைக்கப்படுகிறது. நேற்று தோன்றிய ஜாதி இயக்கங்கள் எல்லாம் அரசியல் வானில் கொடி கட்டிப் பறக்கின்றன. நாமோ அற்ப விஷயங்களில் வேற்றுமைகளை, விரிசல்களை விதைக்கிறோம். வலிமை என்பது ஜனநாயகத்தில் எண்ணங்களில் அல்ல, எண்ணிக்கையில். ஆம், ஒற்றுமையில். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு. நம் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் செய்யப்படுவோமேயானால் நம் எதிர்கால சந்ததிக்கு சிறந்த நல் வாழ்வை அமைத்துத் தர முடியும். எதிர்காலம் குறித்த முன்னோக்கும் உணர்வும் வரலாறு குறித்த பின்னோக்கும் அறிவும் சூழ்ச்சிகளை வெல்லுகின்ற சூத்திரமும் தேவை.


கடந்த கால நம் சமூக சோக நிகழ்வுகள் வரலாற்று பக்கங்களை நிரப்ப அல்ல. விழாமலே வாழ்ந்தோமா? என்பதில் பெருமை இல்லை. விழுந்தபோது மீண்டும் எழுந்தோமா? என்பது தான் கேள்வி. கடமை அழைக்கிறது காரியம் ஆற்ற. கன்னல் வாழ்வை சமுதாயம் கேட்கிறது. இடி விழுந்தால் எரிந்து போக நாம் கட்டுமரம் அல்ல, கடல். ஆம். எதையும் தாங்கும் இதயம் பெற்றவர்கள். கிழக்கே உதிக்கும் சூரியனை யாரும் தடுத்துவிட முடியாது. நாம் ஒன்றுபட்டால் எந்த சக்தியும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது. நாம் ஒன்றுபட்டு அரசியலில் நம் வலிமையை காட்ட வேண்டும். இந்திய தேசிய மக்கள் கட்சியில் ஒன்று பட்டு நம் உரிமையை பெறுவதற்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்.

சமூகம் குண்டடிபட்டு குற்று உயிரும் குலையுயிருமாக கூவிக் கொண்டு இருக்கும் நேரத்தில் குண்டு வந்த திசையை ஆராய்வது அறிவுடமை அல்ல. நீங்கள் அமைப்புகளாகவோ, கழகங்களாகவோ, நிறுவனங்களாகவோ, டிரஸ்ட்களாகவோ செயல்படுவதில் ஆட்சேபனை இல்லை. அரசியல் உரிமை என்ற நிலை வருகின்ற போது உங்கள் கருத்துக்களும், சிந்தனைகளும், ஒத்துழைப்பும் இந்திய தேசிய மக்கள் கட்சிக்கு மட்டுமே என்ற உறுதியான முடிவு எடுக்க வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம். முஸ்லிம்களை யாரும் தொப்பி போட்டோ, நோன்பு கஞ்சி குடிப்பது போன்று பாவனை செய்தோ, மயக்கு மொழி பேசியோ ஏமாற்ற முடியாது என்ற நிலையை எடுக்க இன்றே தொடர்வீர் ஒற்றுமையை நோக்கி உங்கள் பணியை.

வெள்ளத்தை நிறுத்த தெரிந்தால் கோடைக்கு பயன்படும். நம் சமூக உள்ளங்களை இந்திய தேசிய மக்கள் கட்சியில் ஒன்று படுத்த தெரிந்தால் உரிமைகள் ஓடி வரும். இந்திய தேசிய மக்கள் கட்சி மட்டுமே அரசியலில் வழி நடத்தும் என்று உறுதி மொழி எடுப்போம். உணர்வோம்! ஒன்றுபடுவோம்!! உயர்வோம்!!! வஸ்ஸலாம்.

இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு

50/330, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை – 600 005
தமிழ்நாடு செல்: 9943802111, 9442815299,
9344520458, 9786011679, 9344510369

0 comments:

Template by - Abdul Munir - 2008 - layout4all